ஏன் வேண்டும் எண்ணெய் குளியல்! (மருத்துவம்)
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, பலருக்கும் அவ்வப்போது உடல் உஷ்ணமாகி பாடாய்ப்படுத்தும். இந்த உடல் உஷ்ணத்திலிருந்து விடுபட, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமாகும். மேலும், எண்ணெய் குளியல் தரும் பலன்களை பார்ப்போம்:சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு, சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து குளித்தால் உடல் குளுமையாகும்.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமது உடல், உள்ளம் மட்டும் சுத்தமாவதில்லை. நம் உடலை சமமான உஷ்ணநிலையில் வைக்கிறது. மனதில் உற்சாகம் பிறக்கச் செய்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
பல தலைமுறைகளாக வாரத்திற்கு இருமுறை அல்லது ஒருமுறையோ எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததால்தான் நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். இந்தநிலை மாறி வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் நல்லது.
நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு அறிவியல் ரீதியாகவும் பல தொடர்பு இருக்கின்றது. உடல் சூடு, உடல் வலி, தசைவலி, சோர்வுக்கு உடனடி நிவாரணம் ஆகியவற்றை தரக்கூடியது எண்ணெய் குளியல். மேலும், எண்ணெயை தேய்த்து அந்த உடலோடு வெயிலில் நின்றால் சூரியனில் இருக்கும் செரோடோனின் ஹார்மோன் எளிதில் நமக்கு கிடைக்கும். இதனால், நமது உடல் புத்துணர்வு அடைந்து சுறுசுறுப்பாகிவிடும்.