தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை: கோத்தபய ராஜபட்ச
தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை. வேறு இடத்தைப் பாருங்கள் என்று இலங்கை பாதுகாப்புச் செயலரும் அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச காட்டமாக கூறியுள்ளார். தனி ஈழம் அமைத்துத் தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் தனி ஈழம் அமைத்துத் தரப்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள கோத்தபய ராஜபட்ச, இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை என்று கோபமாகக் கூறினார். இலங்கையில் வவுனியா, முல்லைத் தீவு பகுதிகளில் போரைக் காரணமாகக் காட்டி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி அழித்து வருகிறது. முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் அடிமைகளைப் போல, கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்பது சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த விடியோ மூலம் தெரிய வருகிறது என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார். இதற்கும் கோத்தபய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்ட பின், ரவிசங்கர் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்தார். அப்போது முகாம்கள் சிறப்பாக உள்ளன. உலகில் இதுபோன்று சிறந்த முகாம்களை நான் பார்த்ததே இல்லை என்றுதான் கூறினார். போரினால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க சிலர் முயற்சி செய்வதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் (விடுதலைப் புலிகள்) ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளனர் என்றார் அவர்.
Average Rating