தமிழக நாடாளுமன்றக்குழுவினர் இலங்கைக்கான உதவிகளை அதிகரிக்க வழி வகுத்துள்ளனர் -அமைச்சர் லக்ஸ்மன்
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகைதந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் தமிழக எம்.பி.க்கள் மட்டுமே எமது நாட்டின் நிலைமையை புரிந்துகொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் தொடர்பில் இந்திய எம்.பி.க்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு அழுத்தங்கள் இருந்த நிலையிலும் அவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நடந்துகொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம்செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டிருந்தனர். மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் தமது நாடுகளுக்கு சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டும் இருந்தனர். சிலர் விரைவான மீள்குடியேற்றம் குறித்து அழுத்தங்களை வெளியிட்டனர். மற்றும் சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகிய தமிழக எம்.பி.க்கள் இலங்கை அரசாங்கம் அகதி மக்களுக்கு செய்துகொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டுள்ளனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்துக்கு விடுத்துள்ளனர். இதுவரை இலங்கை வந்தவர்களிலேயே தமிழக எம்.பி.க்கள் சிறப்பான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பாரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். மாறாக இந்தியாவின் இலங்கைக்கான உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்தக்க விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating