வாகரைப் பொலீசாரினால் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் ஐவர் விடுதலை
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதான ஐந்து இந்திய பிரஜைகளையும் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிசாரால் கடந்த 7ம் திகதி சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மறுநாள் 8ம் திகதி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதியளித்த நீதிமன்றம் கடவுச்சீட்டுக்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக நேற்றுவரை பொலிஸாருக்கு நீதிமன்றத்தினால் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. நேற்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்ததும், பொலீசார் தமது அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை நீதிபதி ரி.சரவணராஜா பிறப்பித்துள்ளார்.
Average Rating