ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கீடு -ஐ.தே.கட்சி
அடுத்த மாதம் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த வருடத்துக்கான இடைக்கால கணக்கறிக்கையில் ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி 04 மாதங்களுக்கு ஜனாதிபதியின் செலவுக்காக 230 கோடிரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தவிர்த்து இடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. அது 04மாதங்களுக்கு மாத்திரம்தான். இந்த 04மாதங்களுக்குமான ஜனாதிபதியின் செலவாக 230 கோடிரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ஒரு கோடி 90 லட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. எதிர்வரும் தேர்தல்களில் மக்களை அழைத்துவந்து அன்னதானம் வழங்குவதற்காகவே இப்பணம் செலவிடப்படும். தற்போதுவரை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 70வீதம் ஜனாதிபதிக்கும் அவரது உறவினர்களுக்கும் செலவிடப்படுகின்றது. மீதி 30வீதமே அமைச்சர்களின் செலவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோசடியை இந்நாட்டு மக்கள் அனுமதிக்கலாமா? உண்மையில் இந்தப் பணம் மக்களுடையது. இதை ஜனாதிபதி தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்துகிறார். இது இவ்வாறிருக்க, இபெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிப் போராட்டம் நடத்துகின்றனர். அப்போராட்டத்தை அடுத்து துறைமுகம், இலங்கை மின்சாரசபை, நீர்வழங்கல் சபை ஆகிய நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களும் சம்பள அதிகரிப்புக் கோரி போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொழிற்சங்கத்துடன் மாத்திரம்தான் பேச்சு நடத்தினார். இதனால் நிலைமை மோசமாகியுள்ளது. இந்தப் பேச்சின் பயனாக கூட்டுத்தாபனத் தலைவரே நன்மையடைந்துள்ளார். ஊழியர்கள் அல்லர். அரசு பக்கசார்பற்ற முறையில் தொழிற்சங்கங்களுடன் பிரச்சினைகளைத் தீர்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது அரசு பிரச்சினையை மேலும் பெரிதாக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
One thought on “ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கீடு -ஐ.தே.கட்சி”
Leave a Reply
You must be logged in to post a comment.
அப்ப என்ன ஐ.தே.கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஒரு ரூபா 90 சதமா ஜனாதிபதிக்கு ஒதுக்கினீர்கள்?
எல்லோரும் ஒரு ஜாதி தானே….