ஆஸ்லோ பேச்சில் முன்னேற்றம் இருக்காது புலிகள் கருத்து
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையை நிறுத்தும் அளவுக்கு ஆஸ்லோ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்று புலிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இலங்கையில் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் நடந்துவருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்தியஸ்தம் வகிக்கும் நார்வே செய்துள்ளது.
நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் வருகின்ற வியாழக்கிழமை தொடங்கும் இந்த பேச்சுவார்த்தை 2 நாள் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக விடுதலைபுலிகள் பிரதிநிதிகள் நேற்று ஆஸ்லோ நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் தமிழர் பகுதியான கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். மேலும் அமெரிக்காவில் இருந்து 6பேர் கொண்ட குழுவினரும் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள்.
ஆஸ்லோ நகில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் தற்போது வெடித்துள்ள கலவரத்தை நிறுத்தும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது என்று புலிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எங்களுக்கு குறைந்த அளவே நம்பிக்கை உள்ளது. நார்வே நாட்டிற்கு மதிப்பு கொடுப்பதற்காகவே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறோம் என்று புலிகள் பிரதிநிதி குழு தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன் கூறினார். விடுதலைபுலிகளின் இயக்க அரசியல் பிரிவு தலைவராகவும் தமிழ்செல்வன் இருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதியில் ராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் பற்றியும் நார்வே நாட்டிடம் எடுத்துரைப்போம் என்றும் தமிழ்செல்வன் கூறினார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று இரு தரப்பு பிரதிநிதிகளும் தெரிவித்தனர். போர்நிறுத்த மீறல்களால் இதுவரை 650_க்கும் மேற்பட்ட வர்கள் பலியாகி உள்ளனர்.