அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீதான வழக்கில் நாலு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீதான வழக்கில் நாலு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீது சென்னையில் கொலை, மிரட்டல், கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 1990-ம்ஆண்டு கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலையானார். அதன்பிறகு இந்த வழக்குகளின் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் குற்றவாளியாக சென்னை கோர்ட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு சென்றிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை போலீஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்றையதினம் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி இதில் பதிலளிக்க 2 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Average Rating