மலையகத்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது..!
மலையகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளினால் எடுத்துச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக மத்திய மாகாண பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் தலவாகலை,கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 5 கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ எடைக்கொண்ட இரண்டு குண்டுகள், 4 கிலோ கிராம் சி4 ரக வெடி மருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் தலவாக்கலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என மத்திய மாகாண பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating