ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க உறுதி
மத்தியில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய அதிமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு வலியுறுத்தி உள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 3000 பேருக்கு அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் இன்று காலை முதல் மண்டபத்துக்கு வரத் தொடங்கினர்.
அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 10.10 மணிக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் 300 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
10 நிமிடத்தில் இந்த கூட்டம் முடிந்தது. இதையடுத்து, அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3000 பேர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் உற்பத்தியாகும் 4830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் மத்திய அரசு தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.
தமிழகத்தை வளம் மிகுந்த மாநிலமாக்க தொலைநோக்கு திட்டம்2023 தீட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. டெல்லியில் கடந்த வாரம் நடந்த தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழக மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அனுமதிக்காமல், ஜெயலலிதாவை 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்து அவமானப்படுத்திய மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய அல்லும் பகலும் அயராது பாடுபடுவோம் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், முனுசாமி, வைத்தியநாதன், வளர்மதி உள்ளிட்டோர் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா பிரதமராக ஆவதற்கு அதிமுக நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். போயஸ் கார்டனில் இருந்து பொதுக்குழு நடந்த வானகரம் வரை ஜெயலலிதாவை வரவேற்று அதிமுகவினர் கட்அவுட், பேனர்களை வைத்திருந்தனர். பொதுக்குழு நடந்த மண்டபத்துக்கு வெளியே ஏராளமான அதிமுகவினர் குவிந்திருந்தனர்.
Average Rating