சனல் 4 காணொளிக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை- ஐ.நா. மனித உரிமை பேரவை
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருக்கும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ எனும் காணொளியை காட்சிப்படுத்துவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் எவ்.ஐ.எவ்.டி.எச். ஆகிய அமைப்புக்களே ஜெனீவாவில் இந்தக் காணொளியை காட்சிப்படுத்துவதாக மனித உரிமைகள் பேரவை கூறியிருப்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர தூதரகம் அறிவித்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருக்கும் காணொளி ஜெனீவா மனித உரிமை பேரவை வளாகத்தில் காண்பிக்கப்படுவதற்கு ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க எழுத்துமூலமாகத் தனது எதிர்ப்பினை மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்குத் தெரிவித்திருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடொன்றுக்கு எதிரான காணொளிக் காட்சியை அரசசார்பற்ற நிறுவனங்கள் காண்பிப்பதற்கு எடுக்கும் முயற்சியானது ஐ.நா. சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையிலேயே சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி காண்பிக்கப்படுவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூறியுள்ளது.
Average Rating