உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்
உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் ஏற்கெனவே உள்ளன.
டுபாயில் தற்போது கட்டப்பட்டுள்ள கண்ணாடியால் ஆன ”இன்பிளைட் டுபாய்” காற்றுச் சுரங்கம் 20 மீற்றர் உயரம், 5 மீற்றர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.
இதுகுறித்து, சுரங்க நிலைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறியுள்ளதாவது, இந்த காற்றுச் சுரங்கம் 4 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். 4 மிகப்பெரிய மின்விசிறிகள் சுற்றும். மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும். இந்த மையத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் கண்ணாடி கோபுரத்தின் உள்ளே பறந்து மகிழலாம்.
சுமார் 3,650 மீற்றர் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்தால் காற்று விசை எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு காற்று சக்தியை உணர முடியும். பறக்கும்போது வெளியிடங்களை பார்க்க முடியாது. ஆனால் வானத்திலிருந்து விழும் உணர்வை பெற முடியும். தரையில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.
Average Rating