கோல் எதுவும் அடிக்காமல் மெக்சிகோ-அங்கோலா ஆட்டம் டிராவில் முடிந்தது
உலககோப்பை கால்பந்து போட்டியில் 8-வது நாளான நேற்று `சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- செர்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முழு போக்கையும் தன் வசப்படுத்தி கொண்ட அர்ஜென்டினா கோல் மழை பொழிந்தது. முடிவில் 6-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-வது சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆலந்து -ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆலந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஹேன்ஓவர் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் `டி’ பிரிவில் இடம் படித்துள்ள மெக்சிகோ, அங்கோலா அணியுடன் மோதியது. ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில் மெக்சிகோ கேப்டன் ராபில்மார்சுஸ் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் வெளியே சென்று அதிர்ச்சி கொடுத்தது.
அதன் பிறகு மீண்டும் 45-வது நிமிடத்தில் மெக்சிகோ கோல் அடிக்க முயன்றது. குவிர்மோ அடித்த ஷாட்டை அங்கோலா கோல்கீப்பர் ரிகார்டோ அருமையான முறையில் தடுத்தார். ஆட்ட நேர முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் 2-வது பாதியில் மெக்சிகோ வீரர்கள் ஆக்ரோசத்துடன் ஆடினார்கள். ஆனால் பலமுறை அவர்களின் கோல் அடிக்கும் வாய்ப்பை, ரிக்கார்டோ தகர்த்தார். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் அங்கோலா வீரர் மங்காங்கா பந்தை கையால் தடுத்தார். இதனால் அவருக்கு `ரெட்கார்டு’ வழங்கப்பட்டது. கடைசி 12 நிமிடங்களில் அங்கோலா அணி 10 வீரர்களுடன் ஆடியது.
எவ்வளவோ போராடியும் கடைசி வரை அங்கோலா அணிக்கு எதிராக மெக்சிகோ வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுமின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. புதிதாக களம் கண்டுள்ள அங்கோலா இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததன் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியின் முடிவு மெக்சிகோவுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அந்த அணி 2-வது சுற்றில் நுழைய வேண்டுமானால் 21-ந்தேதி போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தாலே போதும்.