அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் பிரதமர் கெவின் ருத் தோல்வி அடைவார்..!!
ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமான மாதிரிக் கருத்துக் கணிப்பு ஒன்றை சிட்னியின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை நேற்று நடத்தியது.
இதில், தொழிற்சங்க கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற இரு கட்சி அடிப்படையிலான ஆஸ்திரேலியன் அரசியலில் ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சி 47 சதவிகிதமும், கன்சர்வேடிவ் கட்சி 53 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன. தேர்தல் சமயத்தில் 20 அல்லது 25 சீட்டுகள் அதிகப்படியாகப் பெறுவதற்கு தொழிற்சங்கக் கட்சிக்கு வாய்ப்பு இருக்கின்றது என்றும் அந்தப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
மொத்தம் 1053 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியதில், 78 சதவிகிதத்தினர் தேர்தல் பிரச்சாரத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான அப்போட் நன்கு செயலாற்றினார் என்று தெரிவித்தனர். எட்டு சதவிகிதத்தினர் மட்டுமே கெவின் ருத்திற்கு ஆதரவான பதிலை அளித்தனர். மீதமுள்ளவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், முதல் பெண் பிரதமராக ஆட்சியில் இருந்த ஜூலியா கில்லார்டை உட்கட்சி தேர்தலில் வீழ்த்திவிட்டு பிரதமர் பதவிக்கு கெவின் ருத் தேர்வானார். இப்போது தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவு தனக்குப் பாதகமாக இருப்பதை அறிந்து அவர் மனம் தளரவில்லை. இதற்கு முன்னாலும் இதுபோல் இருந்த நிலைமைகள் தேர்தல் நேரத்தில் மாறியுள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
பொருளாதாரமே தற்போதைய தேர்தலின் முக்கிய காரணியாக உள்ளது. நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டின் அரசாங்க கையிருப்பாக 40 பில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்கள் வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் 29ஆவது பிரதமர் குறித்து கருத்துக் கணிப்புகள் தெளிவாக தெரிவித்துள்ள போதிலும், அப்போட் இதுகுறித்து அவசரப் படவில்லை. எதுவும் நடக்கலாம் என்ற மனநிலையிலேயே அவர் பதில் அளித்துள்ளார்.
Average Rating