வளர்த்த கடா மட்டுமல்ல, குளோனிங்கில் உருவான கடாவும் மார்பில் பாயக்கூடும்!!
தென்கொரியாவில் அண்மையில் நடந்த சம்பவமொன்று வளர்த்த கடா மட்டுமல்ல, குளோனிங்கில் உருவான கடாவும் மார்பில் பாயக்கூடும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பார்க் ஸே பில் (54 வயது) தென்கொரியாவின் பிரபல்யமான முளையவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமாவார். இவர் 4 வருடங்களுக்கு முன்னர் குளோனிங் முறையில் மாடு ஒன்றை உருவாக்கினார்.
அண்மையில் இவர் அந்த மாடு குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதன்போது அந்த மாடு திடீரெனப் பேராசிரியரைத் தாக்க ஆரம்பித்துள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் வரையில் மாட்டின் தாக்குதலுக்கு இலக்கான பார்க்கின் விலா என்புகள் 5 முறிவடைந்துள்ளதுடன் முள்ளந்தண்டும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளனது.
இத்தாக்குதல் சம்பவத்தின்போது பார்க், விசேடமான ஆடையொன்றையும் நீண்ட காலணியை அணிந்துகொண்டிருந்துள்ளார்.
இதனால் சுமார் 770 கி.கி. நிறையுடைய இந்த மாட்டின் தாக்குதலிலிருந்து அவரால் இலகுவில் தப்பிச் செல்ல முடியவில்லை என இவர் கடமையாற்றும் தென்கொரியாவின் ஜெஜு தேசிய பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பேராசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் குணமடைவதற்கு குறைந்தது 8 வாரங்களாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவொரு மாட்டிலிருந்து பெறப்பட்ட கலங்களிலிருந்தே இந்த மாட்டை இவர் உருவாக்கினார்.
நோய்களை குணப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானிகள் பலர் முயற்சிக்கும் மனித முளையவியல் துறையிலும் பேராசியர் ஸேபில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating