ஆப்கானிஸ்தானில் தலை வெட்டப்பட்டுக் கிடந்த ஆறு உடல்கள் கண்டுபிடிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்மாகாணம் ஒன்றில் தலை வெட்டுப்பட்டு கிடந்த ஆறு சடலங்களை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரர்களாகப் பணி புரிந்த இவர்கள் காவல்நிலையச் சுவர்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் போன்றவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.
மாநிலத் திட்டங்களை செயல்படுத்துவோரைத் தொடர்ந்து தாக்கும் தலிபான் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் இவர்கள் வெளிப்படையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது. தலிபான்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் காந்தகாரில் பிடிவாதமான கிளர்ச்சி மூலம் தலிபான் தீவிரவாதிகள் நகரையே உலுக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று காவல்துறை செய்தியாளரான அகமது துரானி தெரிவிக்கின்றார்.
இதனிடையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் இன்று காலை துணை மாகாண ஆளுநர் ஒருவர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலைப் படையைச் சேர்த்த தீவிரவாதி ஒருவன் தாக்கியுள்ளான். இந்த மோதலில் ஆளுநர் தப்பித்ததாகவும், அவரது பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பல்க் மாகாணக் காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான ஷெர் ஜன் துரானி தெரிவித்துள்ளார்.
இரண்டு சம்பவங்களுக்கும் இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆயினும்,அரசாங்க வேலைக்கு எதிராக ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாக தலிபான் தீவிரவாதிகள் முன்னரும் இதுபோன்று அரசு ஒப்பந்ததாரர்களைப் படுகொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Average Rating