என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்: நகைச்சுவை நடிகர் வடிவேல்
வடிவேல் இரட்டை வேடங்களில் நடித்த தெனாலிராமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது.
பாடல்களை படஅதிபர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டார். இந்த விழாவில், நடிகர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2 வருடங்களில் எனக்கு நல்ல ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு, காலத்தின் கட்டாயம். அதனால் எனக்கு எந்த வேதனையும் கிடையாது. நிறைய படவாய்ப்புகள் வந்தன. நான்தான் வேண்டாம் என்று கூறினேன். அடுத்து நடிக்க வந்தால் அது கிங் ஆக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே தெனாலிராமன் படம் வந்திருக்கிறது.
ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டுகளிலும் என் பெயர் இல்லையே தவிர, அந்த குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
சிலர் எனக்கு படவாய்ப்பு கொடுக்கவே பயந்தார்கள். அந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் படவாய்ப்புகள் வந்தன. அந்த மொழி படங்களில் நான் நடித்திருந்தால் வடிவேல் ஊரை காலி செய்துவிட்டு போய்விட்டான் என்று பேசியிருப்பார்கள். அதனால் தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வாறு வடிவேல் கூறினார்.
மேலும் அவரிடம் நிருபர்கள், அரசியல் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று கேட்ட போது, என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நீ படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று எனக்கு புத்திமதி சொல்லுங்கள். என்று தெரிவித்தார்.
Average Rating