மாற்று இதயம் பொருத்தப்பட்ட பெண் பேசத் தொடங்கினார்; 13 நிமிடங்கள் அம்பியூலன்ஸில் பயணித்த இதயம்..
மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கியுள்ளதாகவும், அவருக்கு வாய் வழியாக திரவ உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்தவர் ஹவோவி (21 வயது). இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். மாற்று இதயத்திற்காக காத்திருந்த அவோவி, சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் வீதி விபத்தில் உயிரிழந்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதனின் இதயம் ஹவோவிக்கு திங்கள் இரவு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹவோவி நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவோவிக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை திங்கள் இரவு 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், செவ்வாய் காலையில் அகற்றப்பட்டது. இப்போது அந்த பெண் பேசத் தொடங்கிவிட்டார். தற்போது அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த லோகநாதனின் இதயம், சென்னை அரசு பொது வைத்தியசாலையில் இருந்து, 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 13 நிமிடத்தில், கொண்டுசெல்லப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதன்போது, விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு, 200ற்கும் அதிகமான சென்னை பொலிஸார் வீதி பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
மதுராந்தகத்தை சேர்ந்த, லோகநாதன் என்ற இளைஞர் லொறியில் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்,
செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின், சென்னை, அரசு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, லோகநாதனின் உடல் உறுப்புக்களை தானமளிக்க, உறவினர்கள் முன் வந்தனர்.
இந்நிலையில் இதயக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹவோவி என்ற பெண்ணிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating