பேஸ்புக் மூலம் காதல்: திருவட்டாரில் வீட்டை விட்டு மாயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஞானகிறிஸ்து தாஸ். இவரது மகள் ஆட்லின் சர்மி (வயது 22).
பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 4–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதறிபோன பெற்றோர் ஆட்லின் சார்மியை பல இடங்களிலும் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே ஞானகிறிஸ்து தாஸ் இது பற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் ஆட்லின் சர்மியை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்லின் சர்மியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு ஆட்லின் சார்மி, குளச்சல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஷிபு (27) என்பவருடன் திடீரென திருவட்டார் போலீஸ் நிலையம் வந்தார். அங்கிருந்த போலீசாரிடம், நாங்கள் இருவரும் காதலர்கள் என்றும் தங்களை காணவில்லை என பெற்றோர் புகார் செய்திருப்பதால் போலீஸ் நிலையம் வந்ததாகவும் கூறினர்.
போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது ஆட்லின் சார்மிக்கும் ஷிபுவுக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனதாகவும், அதன்பின்னர் இருவரும் அடிக்கடி இன்டெர்நெட்டில் பேசி பழகி காதலில் விழுந்ததாகவும் கூறினர்.
இதையடுத்து போலீசார் ஆட்லின் சார்மியின் தந்தை ஞானகிறிஸ்து தாசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார். அங்கு மகள், காதலனுடன் இருப்பதை பார்த்ததும் மனம் நொந்தார். மேலும் மகளை அழைத்து செல்ல விரும்பவில்லை எனவும் கூறினார்.
இதையடுத்து போலீசார் ஆட்லின் சார்மியை அவரது காதலருடன் அனுப்பி வைத்தனர்.
Average Rating