ஊழல் பேர்வழிகளின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு!!
பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி கைது! பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது! என்று நாள்தோறும் பல செய்திகள் வெளியாகின்றன.
லஞ்சம் வாங்கியதாக பிடிபடும் ஒவ்வொரு அரசு அதிகாரியும் சிறைக்கு அனுப்பப்பட்டு, பணியிடை நீக்கமும் செய்யப்படுகின்றனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களும் மேற்கண்ட செய்திகளில் வெளியாகின்றன.
எனினும், இந்த லஞ்சப் பேர்வழிகள் சில மாதங்களிலேயே ஜாமினில் விடுதலையாகி, பணியிட மாற்றலும் பெற்று வேறோரு ஊரில் தங்களது ‘கைவரிசையை’ காட்டிக் கொண்டுதான் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 16 வரை மும்பை நகரில் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, 744 அரசு அலுவலகங்களில் வலைவிரித்து, 1099 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வேறு இடங்களில் பணியில் அமர்ந்து, தங்களது ‘மாமூலான’ நடவடிக்கைகளை தொடர்வதை தடுக்கும் வகையில் இவர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் வெளியிட மும்பை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் இவர்களது புகைப்படங்கள் அனைத்தும் ‘பேஸ்புக்கில்’ பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொள்ள இந்த முயற்சி பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி, தங்களது குடும்பத்தாருக்கும், உறவினர்களும் இந்த புகைப்படங்களை பார்க்கும்போது கூணிக் குறுகிப் போகும் அரசுப் பணியாளர்கள், யாரிடமும் துணிந்து கையை நீட்ட தயங்குவார்கள்.
இதன் மூலம், அரசு அலுவலர்களிடையே லஞ்சம் வாங்கும் பழக்கம் வெகுவாகக் குறையும். ஊழலற்ற அரசு நிர்வாகமும் உருவாகும் என்று மும்பை லஞ்ச ஒழிப்பு போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Average Rating