பாலியல் குற்றச்சாட்டு – 278 வருட தண்டனை – டாக்டர் கைது!!
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த ரோஜர் அப்டெல்மஸ்சி கடந்த 2009-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். பல பிரபலங்களுக்கு சிகிச்சையளித்துள்ள இவர் மீது அவரது முன்னாள் ஊழியர் ஒருவரே பாலியல் கற்பழிப்பு புகாரினை அளித்திருந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது 39 பெண்கள் இவருக்கு எதிராக சாட்சியளிக்க முன்வந்தனர். 1995-லிருந்து 2008-ம் ஆண்டுவரை இந்தத் தவறுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால் தான் என்றுமே நோயாளிகளுடன் தனியாக இருந்ததில்லை என்றும், மயக்க மருந்தின் காரணத்தினால் இவர்கள் பிரமையாக தன் மீது குற்றம் சுமத்துவதாகவும் அப்டெல்மஸ்சி வாதிட்டார்.
இருப்பினும், கடந்த 2010-ம் ஆண்டில் இவருக்கு 278 ஆண்டு கால சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவரை அரசு சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதித்திருந்தது. தன் மீதான தீர்ப்பு குறித்து இவர் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து சாவ் பாலோவில் உள்ள நீதிமன்றம் இவரைக் கைது செய்யும் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது இவர் பிரேசிலில் இருந்து தப்பித்துவிட்டார்.
2011-லிருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் சமீபத்தில் பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டுடன் சேர்ந்து பராகுவே தேசிய போதை மருந்து எதிர்ப்பு செயலக அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு கூட்டு விசாரணையின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பராகுவேயின் தலைநகரான அசன்சியானின் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டம் ஒன்றில் இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
70 வயதாகும் இவர் தற்போது பிரேசிலின் எல்லைப்புற நகரமான போஸ்டோ குவாகுவிற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின் சாவ் பாலோவிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating