கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரிதிப்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (45). தன் வீடு அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
மகன் வெங்கட் (எ) அப்பு (16). சென்னையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மகள் பிரியங்கா பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பும் படிக்கின்றனர். நல்ல தம்பதிக்கு அடையாளமாக முருகனும் பிரேமாவும் திகழ்ந்தனர்.
இந்நிலையில் முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தார். குறைந்த வயதில் முருகன் இறந்த தகவல் அறிந்ததும் பல ஊர்களில் இருந்தும் உறவினர்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேமா இடிந்து போய் காணப்பட்டார்.
முருகன் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். மைத்துனன் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரேமா தம்பி நேற்று மாலை வந்தார். அவரைக் கண்டதும் பிரேமா கட்டித் தழுவி கதறினார்.
அப்போது திடீரென்று முருகன் உடல் மீது பிரேமா விழுந்தார். ஆறுதல் சொல்ல உறவினர்கள் முயன்று பிரேமாவை பிடித்து தூக்கிய போது உயிர் இல்லை. கணவன் உடலில் விழுந்தவுடன் பிரேமா உயிர் பிரிந்ததை அறிந்ததும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உறவினர்கள் முடிவின் படி கணவனுக்கும் மனைவிக்கும் இறுதிச் சடங்கு முடிந்தது. தம்பதி உடல்களுக்கு சுடுகாட்டில் ஒரே இடத்தில் தீ மூட்டினர். பிரியமான கணவனை பிரிய மனமின்றி மனைவியும் உடன் இறந்தது உறவினர்களை மட்டுமின்றி பரிதிப்பத்தூர் கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating