வெள்ளக்கோவில்: கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள குள்ள செள்ளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (என்கிற) செல்வக்குமார் (வயது 33) விசைத்தறி உரிமையாளர்.
இவருக்கும் பழனியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் மலர்விழிக்கும் (20) கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது மலர்விழி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் செல்வக் குமாருக்கு மனைவியின் கர்ப்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்– மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உருவானது.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்த செல்வக் குமார் மனைவியிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார். இதனால் இருவருக்குமிடைய சண்டை ஏற்பட்டது.
இதையறிந்த குடும்ப பெரியவர்கள் கணவன் – மனைவியை சமாதானப்படுத்தினர். இது அடிக்கடி தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த செல்வக்குமார் மீண்டும் மனைவியின் கர்ப்பத்தை தவறாக பேசினார்.
இதனால் மன வேதனையடைந்த மலர்விழி கணவரிடம் நியாயம் கேட்டார். அப்போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக் குமார் மனைவியை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் சரமாரியாக அடித்து உதைத்து கழுத்தை நெரித்தார். இதில் மூச்சு திணறி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மலர்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் மலர் விழியின் தந்தை முருகன் மகளிடம் பேச விரும்பி அவரது தொலைபேசிக்கு அழைத்தார். அப்போது அது சுவிட்ச் ஆப் என வந்தது. சந்தேகமடைந்த முருகன் மகளின் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் சுப்பிரமணியை அழைத்து மகள் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
மலர்விழியின் வீட்டுக்கு சென்ற சுப்பிரமணியத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மலர்விழி பிணமாக கிடந்தார். அருகில் இருந்த அவரது கணவர் செல்வக்குமாரிடம் சுப்ரமணியம் விசாரித்த போது அவர் ஆவேசத்துடன் அவளை கொலை செய்துவிட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து சுப்ரமணியம் முருகனுக்கும், வெள்ளகோவில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மலர்விழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முருகன் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான செல்வக்குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating