திருமணம் ஆன ஒரே நாளில் 30 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயம்!!
சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கந்தசாமிபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் ஒரு கியாஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது மகள் கோகிலா (24). எம். காம். பட்டதாரி.
சென்னிமலை அடுத்த ஈங்கூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 30). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கோகிலாவுக்கும் அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர்.
இதன்படி இவர்களது திருமணம் சென்னிமலையில் கடந்த வியாழக்கிழமை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
திருமணம் ஆன மறுநாள் வெள்ளிக்கிழமை சென்னிமலை அடிவாரத்தில் நடந்த சந்தைக்கு கோகிலா அவரது கணவர் சாமிநாதன் மற்றும் தாயார் ராஜேஸ்வரியுடன் சென்றிருந்தார்.
அப்போது அவர் சந்தையில் உள்ள தனது தோழியை பார்த்து வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சாமிநாதன் மற்றும் தாயார் ராஜேஷ்வரி ஆகியார் கோகிலாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.
கோகிலா காணாமல் போனபோது கழுத்தில் 30 பவுன் நகை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கோகிலாவை தேடி வருகிறார்கள்.
கோகிலாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் அவருக்கு ஏற்கனவே ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும் எனவே அந்த வாலிபருடன் அவர் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating