வேலூர் சத்துவாச்சாரியில் 31 கிலோ மிளகாய்பொடி கரைசலில் குளித்த சாமியார்!!
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கைம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார்.
அந்த சாமியார் பெயர், ஊர் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. சாமியார் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு. கன்னட மொழிகள் பேசுகிறார். சத்துவாச்சாரியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சாமியாரிடம் ஆசி பெற்று வந்தனர். பிரத்தியங்கரா தேவி அருள் பெற்றவர் எனக் கூறிக்கொண்ட சாமியார் பல்வேறு பூஜைகள் செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வேலூரில் மழை பெய்ததால் அவர் வ.உ.சி.நகர் 4வது தெருவில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் உலக நன்மைக்காக அவர் வணங்கும் பிரத்தியங்கரா தேவியை வேண்டி இன்று தனது வீட்டில் சிறப்பு பூஜை செய்து மிளகாய் பொடி அபிஷேகம் செய்துக்கொள்ளபோவதாக அறிவித்தார். அதற்காக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி மிளகாய்பொடி அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. சாமியார் பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ஒரு அண்டாவில் அமர்ந்தார். 31 கிலோ மிளகாய் பொடி கரைக்கப்பட்ட தண்ணீரை சாமியார் மீது ஊற்றி பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை எடுத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தனர். மிளகாய்பொடியில் குளித்த அதிசய சாமியாரை பற்றி தகவல் அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து பார்த்து ஆச்சரியமடைந்து சாமியாரிடம் ஆசி பெற்று சென்றனர். இச்சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating