கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பள்ளி முதல்வர் கைது!!
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 44). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
கஸ்தூரி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த பானுமதி (45) என்பவரின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பானுமதியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் பானுமதி, தனது மகளுக்கு வேலை வேண்டாம், தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு கஸ்தூரி பணம் கேட்டு வந்தால் கொன்று விடுவதாக பானுமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அதே தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றும் அந்தோணி (45) என்பவரும் பணம் கேட்டு வந்தால் கொன்று விடுவதாக பானுமதிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பானுமதி வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து கஸ்தூரி, அந்தோணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Average Rating