விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 5 பவுன் நகையை அபகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!!
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே கடந்த திங்கட்கிழமை கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகங்கையை சேர்ந்த அழகுசுந்தரி (வயது36) மற்றும் அவரது குழந்தைகள் விபத்தில் சிக்கினர். இதில் அவரது மகள் பரிதாபமாக இறந்தார்.
கால் முறிவு ஏற்பட்ட அழகுசுந்தரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து நடந்தபோது 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன.
அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் பாஸ்கரன் (40), படுகாயம் அடைந்த பெண்ணின் நகைகளை எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அரசு ஆஸ்பத்திரியில் வைத்து அவரது உறவினர்களிடம் டிரைவர் பாஸ்கரன் ஒப்படைத்தார். அப்போது 5 பவுன் நகை குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் நத்தம் பகுதியை சேர்ந்த பாஸ்கரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 5 பவுன் நகையை அபகரித்ததை பாஸ்கரன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பாஸ்கரனை கைது செய்த போலீசார் நத்தத்தில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 பவுன் நகையையும் கைப்பற்றினர். கைதான பாஸ்கரன் கொட்டாம்பட்டி ஆம்புலன்ஸ் பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகையை ஆம்புலன்ஸ் டிரைவரே அபகரித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating