யாழில் புதையல் இருப்பதாகக் கூறி பாரிய நிதி மோசடி!!
யாழில் தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு, அறுபத்து ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை மூவர் இழந்துள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தைச் சேர்ந்த நால்வர் கீரிமலையில் உள்ள ஒருவரிடம் தாம், வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை தங்கப் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவித்து, ஒரு சிறு தங்கத்திலான வடிவத்தையும் காட்டியுள்ளனர்.
அதன் முழுவடிவமும் தம்மிடம் உள்ளதாகவும் அதன் விலை 20 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவித்து ஒரு இடத்தினை கூறி அங்குவந்து பணத்தை கொடுத்து விட்டு புதையலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
அதனை நம்பி கீரிமலையை சேர்ந்தவர், அவர்கள் கூறிய இடத்திற்கு 20 இலட்சம் ரூபாவுடன் சென்று பணத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு பையொன்றைப் பெற்றுச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்று பையை திறந்து பார்த்த போது, உள்ளே ஈயம் மற்றும் பித்தளை பொருட்கள் காணப்பட்டுள்ளன. அதன் பின்னரே தாம் ஏமாற்றம் அடைந்தது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேபோன்று குறித்த மோசடி கும்பல் யாழ். முஸ்லிம் பள்ளி வீதியை சேர்ந்த ஒருவரிடம் நாற்பத்து இரண்டு இலட்சம் ரூபாவையும், யாழ். சென். பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த ஒருவரிடம் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவையும் மோசடி செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த மோசடி கும்பல் யாழ். நாவற்குழி பிரதேசத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார், அவர்களைக் கடந்த 4ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர், என தெரிவித்தார்.
இதேவேளை யாழில் கடந்த இரண்டு வாரத்தில் நாற்பத்துமூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், பதினாறு இலட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று என்பது ரூபாய் பெறுமதியான பணம், நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating