இல்லாத விடுதலைப் புலிகளுக்கு தடை எதற்கு?
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புப் பட்டியலிலிருந்து நீக்கி விடுதலை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.
இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!
இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படையிலோ என்று நமக்குப் புரியவில்லை.
எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் முன்னுரிமை அதற்குத்தான் தரப்படவேண்டும்” என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
கழகத்தின் நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது – வரவேற்கத்தக்கதாகும்.
Average Rating