ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்றில் மிரட்டிய கருணா அம்மான்!!
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடபகுதியில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தலைவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
2015 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய அமைதிப் படையினர், இலங்கையில் தங்கியிருந்த 1987- 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ்ப் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதாக கருணா கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தம்மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் தாம் அந்தக்கட்சி தொடர்பில் பல தகவல்களை வெளியிட தயங்கப் போவதில்லை என்று கருணா மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதி பதவியில் இருந்தபோது 350 பேரே விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் பிரேமதாஸ, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதன் பின்னர் அந்த இயக்கத்தின் உறுப்பினர் தொகை அதிகரிக்க உதவியதாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்.
பிரேமதாஸவினால் விடுதலைப் புலிகளுக்கு சுமார் 5000 ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக கருணா பாராளுமன்றில் தெரிவித்ததை அடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மேலும் பல இரகசியங்களை வெளியிடப் போவதாக கருணா மிரட்டியதை அடுத்து சபை அமைதியானதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating