திருவனந்தபுரம் அருகே 2 மகன்களுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு கலத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மனைவி மூலம் விஜின் (வயது 17) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் ஷீஜா என்ற பெண்ணை விஜயகுமார் 2–வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விதின் (8) என்ற மகன் உண்டு. இந்த நிலையில் நேற்று காலை விஜயகுமார் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய அவர் வீட்டில் மனைவியும், 2 மகன்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது காலையிலேயே 3 பேரும் வெளியில் சென்றதை பார்த்ததாக கூறி உள்ளனர்.
இதனால் மனைவி, மகன்களை விஜயகுமார் தேடி அலைந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரமனை ஆற்றின் கரையில் பள்ளி புத்தக பைகளும் அவரது மகன்களின் அடையாள அட்டைகளும் கிடந்தது.
இதனால் பதறிபோன அவர் இதுபற்றி கரமனை போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷீஜா, விஜின், விதின் ஆகிய 3 பேரும் ஆற்றின் கரையில் பிணமாக ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களது பிணத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது இந்த முடிவு பற்றி அக்கம் பக்கத்து வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது விஜயகுமாருக்கு குடிபழக்கம் இருந்ததால் அவருக்கும் அவரது மனைவி ஷீஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஷீஜாவும், 2 மகன்களும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating