கடத்தல் நாடகம் அம்பலம்: 2 வயது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்!!
காசிமேடு, சிங்காரவேலர் நகரில் வசித்து வருபவர் முத்து, மீனவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 2½ மாத குழந்தை ஜெனீபர்.
நேற்று மாலை மகாலட்சுமி மாமியாருடன் வண்ணாரப்பேட்டை போலீசில் தனது குழந்தை ஜெனீபர் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் கொடுத்தார்.
அதில், ‘ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாலையில் குழந்தைக்கு சிகிச்சை பெற சென்றேன். மாத்திரை வாங்கும் இடத்தில் கூட்டமாக இருந்ததால் குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து வரிசையில் நின்றேன். திரும்பி வந்த பார்த்த போது குழந்தையுடன் அந்த பெண்ணை காணவில்லை’ என்று தெரிவித்து இருந்தார்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மாலையில் சென்றதாக மகாலட்சுமி கூறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் பழவேசம் மற்றும் போலீசார் அவரை தனியாக அழைத்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் குழந்தை ஜெனீபரை ரூ. 1 லட்சத்துக்கு அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ள வியாபாரி முத்து கிருஷ்ணனிடம் விற்றதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து வியாபாரி முத்துக்கிருஷ்ணை போலீசார் பிடித்தனர். அப்போது குழந்தை ஜெனிபர் ஐதராபாத்தில் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர். அங்கு குழந்தையை மீட்டு சென்னை வந்து கொண்டு இருக்கிறார்கள். குழந்தையை வாங்கியவரையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
யார் மூலம் எவ்வளவு பணத்திற்கு குழந்தை விற்கப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்று மகாலட்சுமி, முத்துகிருஷ்ணனிடம் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating