பொள்ளாச்சி ஜோதி நகரில் கண்காணிப்பு கேமிரா மூலம் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கை!!
பொள்ளாச்சி போலீஸ் சரகம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்க போலீசார் ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகள், வங்கிகள், பெட்ரோல் பங்க், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
அதன்படி குடியிருப்பு பகுதிகள், பெட்ரோல் பங்க், நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே குற்றச் செயல்களை தடுக்க பொள்ளாச்சி ஜோதி நகரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவில் 8 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
ஓம்பிரகாஷ் தியேட்டர் ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு ஜோதிநகர் ‘சி’ காலனி சந்திப்பு ருக்குமணியம்மாள் பள்ளி ரோடு ஆகிய பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை அங்குள்ள ஒரு வீட்டில் கணினி மூலம் கண்காணித்து வருகின்றனர். கேமராக்களின் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி ஜோதி நகரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக கவுன்சிலர் அய்யப்பன் வரவேற்று பேசினார். இதில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் ராதா, கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள் வடுகை கனகு, தனேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Average Rating