தாஜ் மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு: வெளிநாட்டினர் இனி ரூ.1000 செலுத்த வேண்டும்!!
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகாலை கண்டு களிப்பதற்கென்றே கோடிக் கணக்கான உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, லட்சக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டுதோறும் ஆக்ரா நகரத்துக்கு வந்து செல்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சின்னமான தாஜ் மகாலை ஆக்ரா பெருநகர மேம்பாட்டுக் குழுமமும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையும் நிர்வகித்தும், பராமரித்தும் வருகின்றன.
நாளுக்கு நாள் ஏறி வரும் விலைவாசி நிலவரப்படி, தாஜ் மகாலை பராமரித்து, நிர்வகிக்கும் செலவுகளும் அதிகரித்தே வருகின்றன. அதனால், தாஜ் மகாலை சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த ஆக்ரா மேம்பாட்டுக் குழுமம் முடிவு செய்தது.
தற்போது, 15 வயதுக்குட்பட்டவர்கள் தாஜ் மகாலை இலவசமாக சுற்றிப்பார்க்க முடிகின்றது. இந்த நடைமுறையை மாற்றி இனி 5 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியர் மட்டும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், 20 ரூபாயாக இருந்த 15 வயதுக்குமேற்பட்ட இந்தியர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை இனி 50 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 40 ரூபாய் ஆக்ரா பெருநகர மேம்பாட்டுக் கழகத்துக்கும், 10 ரூபாய் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கும் போய் சேரும்.
’சார்க்’ என்ற தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். வெளிநாடுகளிடம் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும். இந்த தொகையில் இருந்து 750 ரூபய் ஆக்ரா பெருநகர மேம்பாட்டுக் கழகத்துக்கும், 250 ரூபாய் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கும் போய் சேரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை உத்தரப்பிரதேசம் மாநில அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் இந்த புதிய கட்டணம் உடனடியாக அமலுக்கு வரும் என ஆக்ரா பெருநகர மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Average Rating