சனிப்பெயர்ச்சிக்கு கணவர் கோவிலுக்கு வராததால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை!!
சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சுப்பையா. இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். உதவி கமிஷனர் ஒருவரிடம் டிரைவராக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் பேச்சியம்மாள் (வயது 27). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும் என்று தெரிகிறது.
நேற்று சனிப்பெயர்ச்சியையொட்டி, பேச்சியம்மாள் கோவிலுக்கு போக விரும்பினார். கணவர் சுப்பையாவையும் கோவிலுக்கு அழைத்தார். கோவிலுக்கு செல்ல சுப்பையா மறுத்ததாக தெரிகிறது. இதையொட்டி அவர்களுக்குள் நேற்று மாலை சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. சுப்பையா, வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார்.
இரவு 9 மணி அளவில் சுப்பையா மீண்டும் வீடு திரும்பினார். வீட்டுக்கு திரும்பிய சுப்பையாவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் அவரது மனைவி பேச்சியம்மாள் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இது பற்றி எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மதிஅரசு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். பேச்சியம்மாளின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் நேற்று இரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
Average Rating