ஐ.தே.க.வைப் பிரிந்து ஜனாதிபதியின் பக்கம் சாயுமா இ.தொ.ஐ.மு?
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதாசிவம் கடந்த மாகாண சபை தேர்தலில் நுவரெலிய மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 10,002 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டார்.
நுவரெலிய மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியாக இது இயங்கி வந்த நிலையில், நுவரெலிய மாவட்டத்தில் பலம் பொருந்திய திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொண்டுள்ளதால் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நேற்று வௌியிடப்பட்ட எதிரணி பொது வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாமைக்கு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தங்களுடைய கருத்துக்கு மதிப்பளிக்கப்படாத சூழ்நிலை இருப்பதால் அந்தக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுக்க உள்ளதாக அக்கட்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் இன்று மாலை நுவரெலியாவில் கூடவுள்ள அக் கட்சியின் செயற்குழு இது குறித்து ஆராய்ந்து இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அக்கட்சியில் உள்ள சிலர் எதிர்பார்க்கின்ற போதும், கட்சியின் தலைமை உள்ளிட்ட பெரும்பாலானோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதையே விரும்புவதாக கூறப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா ஆதரவளிக்கும் என்பது குறித்த இறுதி முடிவு நாளை வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating