ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!
கவுரவ கொலைக்கு பேர் போன வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வாலிபரை காதலித்த பாவத்துக்காக உயர் வகுப்பை சேர்ந்த பெண்களை குத்தியோ, எரித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, விஷம் கொடுத்தோ கொல்வது வாடிக்கை.
ஆனால், இந்த வாடிக்கை சலித்துப் போனதால் தங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்த தலித் வாலிபரையும், அவரது காதலுக்கு துணை நின்ற இரு நண்பர்களையும் உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் துடிதுடிக்க எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பால்காட் மற்றும் சியோனி மாவட்டங்களின் எல்லையோரம் உள்ள தோபிடோலா கிராமம் அருகே ஒரு ஜீப் கருகிய நிலையில் நின்றிருப்பதாக கடந்த 9-ம் தேதி காலை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த ஜீப்பை சோதனையிட்டபோது, உள்ளே உடல் கருகிய நிலையில் 3 பிணங்கள் கிடந்தன. பால்காட் மாவட்டம் திரோடி பகுதியைச் சேர்ந்த அவர்கள் மூவரும் எரிந்த ஜீப்புக்குள் எப்படி சிக்கிக் கொண்டனர்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது, ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது.
பால்காட் மாவட்டம் திரோடி பகுதியைச் சேர்ந்தவர் தீபக்(23). தலித் வாலிபரான இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் உயர் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அந்தப் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாத அவள் தனது காதலில் உறுதியாய் நின்றாள்.
இவளை திருத்த முடியாது என்று முடிவெடுத்த பெற்றோரும் உறவினரும் அந்தப் பெண்ணின் காதலனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 9-ம் தேதி தோபிடோலா பகுதியில் சந்திக்க வரும்படி காதலியின் செல்போனில் இருந்து தீபக்கிற்கு ஒரு ’மெஸேஜ்’ வந்தது.
தனது நண்பர்கள் ராஜேஷ்(26) மற்றும் நிஹால்(18) ஆகியோருடன் காதலியை சந்திக்கும் ஆர்வத்தில் சென்ற தீபக்கை அவரது காதலியின் தாய் மாமனான சந்திரபோஜ்(41), தீன்தயாள்(30), சுபம்(18), வினோத்(25) ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
அங்கு நின்றிருந்த ஒரு ஜீப்புக்குள் தீபக்கையும், அவரது நண்பர்கள் இருவரையும் தூக்கிப்போட்ட அந்த கும்பல் கதவை பூட்டிவிட்டு ஜீப்பின் மீது டீசலை ஊற்றி, தீ வைத்து எரித்தது. ஜீப்பினுள்ளேயே கதறி, துடிதுடித்த நண்பர்கள் மூவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப கவுரவத்தை காப்பாற்றவே தீபக்கையும் அவரது நண்பர்களையும் கொன்றதாக சந்திரபோஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Average Rating