சிவகாசியில் கழுத்தை நெரித்து பெண் கொலை: தற்கொலை நாடகமாடிய கணவரிடம் போலீசார் விசாரணை!!
சிவகாசி புகழேந்தி தெருவில் வசிப்பவர் சுரேஷ் (வயது 28), அச்சக தொழிலாளி. இவரது மனைவி புவனேசுவரி (25), தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. பவித்ரா (8), சக்தி (7) என 2 குழந்தைகள் உள்ளனர். சரியாக வேலைக்கு போகாத சுரேஷ், மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று மாலையும் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், கயிற்றால் மனைவி கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் புவனேசுவரி மயங்கியதும் பயந்துபோன சுரேஷ், பூச்சி மருந்தை அவர் வாயில் ஊற்றி உள்ளார்.
பின்னர் தனது வாய் மீது பூச்சி மருந்தை தெளித்த அவர் 2 பேரும் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடி உள்ளார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு புவனேசுவரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகாசி நகர் போலீசில் புவனேசுவரியின் தம்பி செல்வம் புகார் செய்தார். அதில் தனது அக்காள் கழுத்தை நெரித்துவிட்டு சுரேஷ் தற்கொலை நாடகமாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில் சிவகாசி நகர் காவல் உதவி ஆய்வாளர் ராமராஜ் வழக்குப்பதிவு செய்து சுரேசிடம் விசாணை நடத்தி வருகிறார்.
Average Rating