புற்றுநோயால் தலைமுடியை இழந்த பெண்களுக்கு கூந்தலை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்!!
புற்றுநோய் வந்து விட்டால் வாழ்க்கையே சூன்யமாகி விட்டது என்று நொடிந்து போகிறார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டால் குணப்படுத்தி விடலாம் என்று பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது தலைமுடி உதிர்ந்து விடும். கூந்தலை இழந்த பெண்களுக்கு விக் தயாரித்து வழங்குவதற்கு வசதியாக கல்லூரி மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக வழங்க முன்வந்தனர்.
இதையொட்டி கூந்தல் தானம் வழங்கும் விழா இன்று கோவையில் உள்ள இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கிரீன் டிரண்டஸ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300–க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த கூந்தலை தானம் செய்தனர்.
8 அங்குலம் முதல் 10 அங்குல நீள முடியை மனமுவந்து வழங்கினர். தலையில் ஒரு முடி உதிர்ந்தாலே அங்கலாய்த்துக்கொள்ளும் பெண்கள் தங்களின் கூந்தலில் இருந்து 10 அங்குல முடியை வெட்டி வழங்கியது அவர்களின் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியது.
இந்த கூந்தல் சென்னையில் உள்ள அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சையின் போது தலைமுடியை இழந்த பெண்களுக்கு விக் தயாரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
கூந்தல் தானம் வழங்கும் முகாம் வருகிற 14–ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கூந்தலை தானமாக வழங்க விரும்பும் பெண்கள் முகாமுக்கு வந்து கூந்தலை தானமாக வழங்கலாம்.
Average Rating