சேந்தமங்கலம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்–1 மாணவி!!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அழகேசன்(வயது 47). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா(வயது 16) ராசாக்கவுண்டம் பாளையம் அருகில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ராசாக்கவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் மாணவி மேனகா பிணமாக கிடந்தார். இந்த கிணறு விவசாய கிணறு. மேலும் 80 அடி ஆழம் கொண்ட கிணறு ஆகும்.
மாணவி மேனகா இறந்து கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழுது கொண்டே சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் கிணற்றின் கரையோரத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கூடினார்கள்.
இது பற்றிய தகவல் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றில் இறங்கினார்கள்.
கிணற்றுக்குள் பிணமாக கிடந்த மாணவி மேனகாவின் உடலை வீரர்கள் மீட்டு கயிற்றின் உதவியிடன் கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மாணவி எப்படி இறந்தார்? என்ன காரணம் ? கொலையா ? தற்கொலையா? என்பது போன்ற விபரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. மாணவி இறந்த சம்பவம் குறித்து அவர் படிக்கும் பள்ளிக் கூடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் உடலை, புதுச்சத்திரம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின் டாக்டர்கள் கொடுக்கும் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் மாணவி எப்படி இறந்தார்? என்பன போன்ற தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
Average Rating