உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!
அம்பேவலை – ஓட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த வௌிநாட்டுப் பிரஜை மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கியபடி போராடிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
35 வயதான நெதர்லாந்து பிரஜையான இவர் 31 வயது பெண்ணை கடந்த 10.02.2015 அன்று அந்த நாட்டில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தின் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று சுற்றுலா நிமித்தம் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதன் பின்பு நேற்று (20.02.2015) மாலை நுவரெலியா வந்த இவர்கள் இன்று காலை 4.30 அளவில் நுவரெலியாவில் இருந்து புறப்பட்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் இருவரும் தன்னை அழைத்து வந்த வழிகாட்டியை விட்டு விட்டு உலக முடிவு பகுதிக்கு சென்றுள்ளனர்.
காலை 8.50 அளவில் புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் கால் தவறி இவர் பாதாளத்தில் பின்பறமாக விழுந்துள்ளார்.
இதன்போது அதிஸ்டவசமாக ஒரு மரத்தில் விழுந்த இவர் அதனை கட்டியனைத்தபடி போராடியுள்ளார். பின்பு பொலிசாருக்கும், படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
இதன்போது நுவரெலியா மூன்றாவது சிங்க படை பிரிவை சேர்ந்தவர்கள் இவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர், அதற்கு பொலிசாரும் வான்படையினரும் உதவி புரிந்துள்ளனர்.
பின்பு இவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையின் பின்பு பயணத்தை தொடர்ந்தார்.
Average Rating