பரமக்குடியில் போலீசாரை தாக்கி கஞ்சா கடத்தல்: தந்தை–மகன் கைது!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கமுதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் வங்கி அருகே ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரை சோதனை செய்ததில் 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர், கே.வேப்பங்குளத்தை சேர்ந்த கர்ணன் மகன் மோகன் (வயது23) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பரமக்குடி போக்குவரத்து போலீஸ் பாரதி, சந்தை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை அவர் வழி மறித்தார். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் பாரதி மீது மோதினர்.
மேலும் அவர்கள் கத்தியை கொண்டு பாரதியை தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர் தப்ப முயன்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்த பிச்சையா, இவரது மகன் அழகர்பாண்டி என தெரியவந்தது.
2 பேரிடம் சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து புகாரின் பேரில் பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து தந்தை–மகனை கைது செய்தார்.
Average Rating