ஈராக்கில் அமெரிக்க துருப்புகள்: எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படும் என்பதை அறிவிக்கவேண்டும்; ரஷிய அதிபர் புதின் நிர்ப்பந்தம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படுகிறது என்பதை அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் நிர்பந்தித்து இருக்கிறார். ரஷிய அதிபர் புதின் டெலிபோன் மூலம் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இது அந்த நாட்டு டி.வி.யில் ஒளிபரப்பானது. அப்போது அவர் கூறியதாவது:- ஈராக்கின் மீது அமெரிக்கா படை எடுத்தது தவறானது. இப்போது அது முன்னாலும் போகமுடியாமல், பின்னாலும் போகமுடியாமல் தவிக்கிறது. ஈராக்கில் இருந்து துருப்புகள் எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படுகிறது என்பதை அமெரிக்கா அறிவிக்கவேண்டும். ஈராக்கின் எண்ணை வளத்துக்காகத்தான் அந்தநாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. எண்ணை வளம் மிக்க ரஷியாவுக்கும் அதுபோன்ற கதி ஏற்படாது. முற்றிலும் புதிய அணு ஆயுதத்தை ரஷியா உருவாக்கத்திட்டமிட்டு உள்ளது. அதோடு அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலையும் உருவாக்கத்திட்டமிட்டு உள்ளது.
பேச்சுவார்த்தை தான் பலன் தரும்
அணு ஆயுத திட்டத்துக்காக ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக இருக்கிறது. ஈரானை அச்சுறுத்துவதை விட, பேச்சுவார்த்தை தான் நல்ல பலனை கொடுக்கும் என்பது தான் எங்கள் எண்ணம்.
அடுத்த ஆண்டு நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிவிடுவேன். இருந்தாலும் அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக நான் விளங்குவேன். பாராளுமன்றத் தேர்தலின்போது நான் ஆளும்கட்சியான ஐக்கிய ரஷியா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். இவ்வாறு புதின் கூறினார்.