இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்!!
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (வயது 35) இவர் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது ஏமாற்றியதாக புகார் கொடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து முருகேசன் நெல்லை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24–ந்தேதி நள்ளிரவு கே.கே.நகர் வீட்டில் பரிமளா தனியாக இருந்த போது இன்ஸ்பெக்டர் முருகேசன் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா புகார் செய்தார்.
இது குறித்து கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்ஜாமீன் பெற்றார். அவர் தினமும் கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே பரிமளா இன்ஸ்பெக்டர் முருகேசனை அவர் ஜாமீன் பெறும் வரை கைது செய்யாமல் போலீசார் காப்பாற்றுவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிமளா குற்றம் சாட்டிருந்தார்.
நேற்று இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து பரிமளா உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 3–ல் பரிமளா ஆஜரானார். அங்கு நீதிபதி அல்லி முன்பு இன்ஸ்பெக்டர் முருகேசன் தன்னிடம் நடந்து கொண்டது பற்றி ரகசிய வாக்குமூலம் அளித்தார். காலை 11.00 மணிக்கு தொடங்கிய ரகசிய வாக்குமூலம் தொடர்ந்து நடந்தது. சுமார் 2 மணி நேரம் அவர் ரகசிய வாக்குமுலம் அளித்தார்.
அப்போது நீதிமன்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. பரிமளாவின் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.
Average Rating