விமானப்படை தளத்தின் மீது புலிகள் விமானம் தாக்குதல்: விமானப்படையை சேர்ந்த 12பேர், புலிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்
விடுதலைப்புலிகள் மீண்டும் நடத்திய விமான தாக்குதலில், இலங்கை ராணுவத்தின் விமானப்படை தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், விமானப்படை தளத்தில் ஊடுருவிய புலிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படையை சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளிடம் விமான பிரிவு இருப்பது கடந்த மார்ச் மாதம் தான் தெரியும். மார்ச் 26ம் தேதி முதல் முறையாக, புலிகளின் விமானப்படையை சேர்ந்த இரு விமானங்கள் கொழும்பு நகரில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீசிச் சென்றன.இதைத்தொடர்ந்து ஐந்து முறை புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. கடைசியாக ஏப்ரல் 28ம் தேதி கொழும்புவில் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிக்கு விடுதலைப்புலிகளின் இரண்டு சிறிய ரக விமானங்கள் இலங்கையின் வடமத்திய பகுதியில் உள்ள அனுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசின. இந்த தாக்குதலில் எம்.ஐ., -24 ரகத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் சேதமடைந்ததுடன், விமானப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.இதே நேரத்தில், அனுராதபுரம் விமானப்படை தளத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமானப்படையை சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. கடுமையாக நடந்த சண்டையில் விடுதலைப்புலிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். விமானப்படை தளத்தின் மீது வான்வழியிலும்,தரை வழியிலும் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறை. அனுராதபுரம் விமானப்படை தளத்தின் தென் பகுதியில் 13 கி.மீ. தொலைவில், விமானப்படையின் பெல்-212 ரக ஹெலிகாப்டரையும் விமானப்படை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் இரண்டு பைலட்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் உறுதி செய்துள்ளார். சமீப காலமாக நடந்து வரும் சண்டையில், விமான தாக்குதலை புலிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதானல், விமானங்களை சுட்டு வீழ்த்தும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பீரங்கிகளை இலங்கை வாங்கியுள்ளது.