கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சம்பவத்தின் போது 9 பேர் வரை பலியாகினர். இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற திருமண ஊர்வல நிகழ்ச்சியின் போது இரு தரப்பு மீனவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் ஏராளமான போலீசார் கூத்தங்குழி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் வீடுகளுக்குள் சென்றும் சோதனை நடத்தினர்.
அப்போது 3க்கும் மேற்பட்ட இடங்களில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 250 வெடிகுண்டுகள் வரை பறிமுதல் செய்யப்பட்டது. அவையனைத்தும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க செய்யப்பட்டது. கூத்தங்குழியில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.
Average Rating