பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல் 22 பேர் பலி; 34 பேர் காயம்
பாகிஸ்தானின் வட மேற்கு மாகாண எல்லையில் பாதுகாப்பு படையினரை ஏற்றி வந்த ட்ரக் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள 60 கிராமங்களில் தலிபான்களுக்கு சார்பான போராளிகளைத் தேடி ஆயிரக்கணக்கான படையினர் மேற்கொண்ட நடவடிக்கையினைத் தொடர்ந்தே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 30 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் எல்லைக்காவற்படையினரெனவும் சில செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இந்த ட்ரக் வண்டி 40 படையினரையும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் காவி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரக் தீப்பற்ற தொடங்கியதைத் தொடர்ந்து பல கடைகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. முதலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ட்ரக்கிலிருந்த வெடிபொருட்கள் யாவும் வெடிக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், ரிக்ஷா சாரதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பினால் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தமையினாலும் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 23 பாதுகாப்பு படையினரும் 11 பொதுமக்களும் உள்ளடங்குவதுடன் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.