ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!!
ஜோலார்பேட்டை பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதை தடுக்க ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 7 வடமாநில வாலிபர்களை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகுல்குமார்(24), சுனில்குமார்(22), முகேஷ்குமார்(23), தீபக்குமார்(23), அஜய்(25), சித்துரன்(24), கிருஷ்ணன்(26) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதாகவும் அவர்கள் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இதை தொடர்ந்து பதுங்கியிருக்கும் கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வரும் ரெயில்களை கண்காணித்து வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குந்தன் என்ற ஜாக்கி(24) என்பதும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரெயில் கொள்ளையர்களின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3,750 ரூபாய் பணம், 5 பவுன் நகை, 2 செல்போன்கள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Average Rating