கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர்!!
கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பாப்பாத்தி (வயது 70). இன்று காலை கருப்பசாமியும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்டனர். பாப்பாத்தி மட்டும் வீட்டில் இருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது. அவர் கட்டிலில் படுத்திருந்தார். இதை நோட்டமிட்ட ஒரு மர்ம வாலிபர் ஹெல்மெட் அணிந்து அங்கு வந்தார். பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நேற்று மாலை ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் பாப்பாத்தியிடம் வந்து வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. எனவே, அந்த வாலிபர்தான் இன்று காலையில் பட்டப்பகலில் ஹெல்மெட் அணிந்து வந்து பாப்பாத்தியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றவர்கள் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating