தப்பியோடிய கைதி பிடிபட்டார்
கைக்குண்டு ஒன்றை (கிரனேட்) தம் வசம் வைத்திருந்த ஒருவரை வாத்துவைப் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். வாத்துவை தல்பிட்டிய தெற்குப்பகுதியின் கஹாதுடுவலவை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தவராவார். இவரை களுத்துறைச் சிறைச்சாலையிலிருந்து பாணந்துறைச் சறைச்சாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, சிறைச்சாலை வாகனத்திலிருந்து வெளியே குதித்து கிராமமொன்றுக்குள் ஓடினார். இதன்போது, அங்கு அவருக்கென்றே மோட்டார் சைக்கிளொன்றில் காத்திருந்த நபரொருவர் இவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். எனினும் அம்மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கத்தைப் பிரதேச வாசிகள் தெரிவித்ததையடுத்து துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் அவர்களிருவரையும் கைது செய்தனர். கைதியை அழைத்துக்கொண்டு சென்ற அவரின் நன்பருக்கு எவ்வாறு தகவல் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.