கணவர் குடிபோதையில் தினமும் தகராறு: திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை!!
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலங்குடி மகாசனம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா தேவி (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை செய்து வந்தார்.
இவரது கணவர் மனோகர். இவர் டாக்சி டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் தனி குடும்பமாக கிராப்பட்டி புதுகாலனியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்கள்.
மனோகருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் மனோகர் சரியாக வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் கடந்த சில நாட்களாகவே மிகவும் மனமுடைந்த நிலையில் வெண்ணிலா தேவி காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை வெண்ணிலா தேவி வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெண்ணிலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை இழந்த குழந்தைகள் இருவரும் பரிதவித்து வருவது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சமீப காலமாக மதுப்பழக்கத்தால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் பெண் போலீஸ் ஒருவர் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating